தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?
மிகவும் சுயகர்வம் உள்ள பாரதியார் போன்ற கவிஞராலேதான் இப்படிப் பாட்டெழுத முடியும். ஆனால் ஒரு சாதாரண மனிதனது வாழ்க்கையைச் சுட்டிக்காட்டி அவரை ‘வேடிக்கை மனிதன்’ என்று அவர் கூறியதில் எனக்கு உடன்பாடில்லை. பாரதி தன்னை சாதிக்கப் பிறந்தவராக எண்ணிக் கொண்டதில் எனக்கு வருத்தமில்லை. ஆனால் ஒரு சாமானியனின் வாழ்வை எள்ளி நகையாடுவது எனக்கு வேதனை தரும் விஷயம்.
உலகில் பிறந்த அனைவருமே சாதனை செய்யப் பிறந்தவர்கள், ஆனால் எல்லோரும் முயற்சி செய்வதில்லை என்ற ஒரு போலியான மாயை இங்கு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. எனது முப்பத்தைந்து ஆண்டு கால ஆசிரியர் வாழ்வில் எந்த ஒரு மாணவனையும் அவ்வாறு நான் உற்சாகப்படுத்தியதில்லை. மாறாக ‘உனது திறமைக்கேற்ப நீ முயற்சி செய்’ என்றுதான் அறிவுறுத்தியிருக்கிறேன். பெற்றோர்கள், பெரியவர்கள், ஆசிரியர்கள், அகத்தூண்டுதல் குருமார்கள் என்று பலரும் சிறுவர்களுக்கு அறிவுறுத்தும்போது அப்துல் கலாம், சச்சின் டெண்டூல்கர், இளையராஜா என்ற சாதனையாளர்களையெல்லாம் மேற்கோள் காட்டி அவர்களைப் போல வரவேண்டும், புகழ்பெற வேண்டும் என்றுதான் கூறுகிறார்கள். இன்றைய பெற்றோர்களைப்பற்றி சொல்ல வேண்டியதேயில்லை. படிப்பு, விளையாட்டு எல்லாவற்றிலும் தங்கள் பிள்ளைகள்தான் முதலாக வரவேண்டும் என்று அவர்களை படுத்தும் பாடு நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் உலகில் பிறந்த அனைவராலும் சாதிக்க முடியாது என்பது எதார்த்தம். அதனால் என்ன குறைந்துவிட்டது?
என் துறையையே எடுத்துக்கொண்டால் ஆயிரமாயிரம் மருத்துவர்கள் எம்.பி.பி.எஸ் முடித்துவிட்டு பிராக்டிஸ் செய்கிறார்கள். அவர்கள் பெயர் அந்த ஊரிலேயே பலருக்குத் தெரியாது. ஆனால் மிகப் பிரபலமான சிறப்பு மருத்துவர் சிலரின் பெயர் உலகுக்கே தெரியும். ஆனாலும் அந்த சிலரைவிட இந்த சாதாரண மருத்துவர்கள் சாதிப்பது அதிகம் பல குடும்பங்களின் ஆரோக்கியத்தைப் பேணுபவர்கள் இவர்களே. இவர்கள் சாதனையாளர்கள் இல்லையா?
ஒரு சாதாரண மனிதனாகப் பிறந்து, சுமாராகப் படித்து, சிறிய வேலையாயினும் ஒழுங்காக செய்து, சொற்ப வருமானமானாலும் அதற்குள் கண்ணியமாக, நேர்மையாக குடும்பத்துடன் வாழ்ந்து, பிள்ளைகளை ஒழுங்காக வளர்த்தால் அத்தகைய ஒருவனது வாழ்க்கையே ஒரு சாதனைதான். கடமையாற்றல் என்பது ஒரு மாபெரும் தவம். அதை ஒருவன் ஒழுங்காக செய்தாலே அவனொரு மேதைதான். அவன் வாழ்வும் பூரணத்துவம் பெற்றதுதான் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.
நாரதரைப் பற்றிய ஒரு கதை உண்டு. சகலமும் கற்ற, திரிலோக ஞானியான அவருக்கு தன்னைப் போன்ற நாராயண பக்தன் எந்த லோகத்திலும் இல்லை என்பது கருத்து. அதை ஒருமுறை நாராயணனிடம் கூற, அவர் ‘நீ பூலோகம் சென்று ஒரு விவசாயியை நாள் முழுதும் இருந்து கவனித்துப் பார்’ என்றார். அவரும் அவ்வாறே சென்று அந்த மானிடனை பார்த்துக் கொண்டிருந்தார். காலையில் தூங்கி எழுந்தவுடன் அந்த விவசாயி நாராயணனை ஒரு முறை வணங்கினார். பின்னர் தனது அன்றாட வேலைகளை செய்யத் தொடங்கினார். அவருக்கு ஏகப்பட்ட துன்ப காரியங்கள் முதல் நாள் நடந்திருந்தன. அவரது விளைந்த பயிர், மழையால் சேதமடைந்திருந்தது. மாடு ஒன்று இறந்து போனது. அவரது மகனைப் பாம்பு கடித்து சிகிச்சை செய்ய ஓடினார். இது போல நாள்முழுதும் அவருக்கு பல இன்னல்கள் வந்தன. இருப்பினும் எல்லாவற்றையும் நேர்கொண்டு காரியங்கள் ஆற்றி, இரவு உறங்கப் போகு முன் மீண்டும் ஒருமுறை அவர் நாராயணனுக்கு நன்றி சொல்லி வணங்கினார். நாரதர் வந்து நாராயணனிடம் தான் பார்த்ததைக் கூறினார்.
நாராயணன் அவரிடம் ஒரு கிண்ணம் நிறைய நல்லெண்ணெய் கொடுத்து ‘இதில் ஒரு துளிகூட சிந்தாமல் உலகை வலம் வர வேண்டும்’ என்று கட்டளையிட்டார். உடனே நாரதர் அவ்வாறே புறப்பட்டுத் தன் கவனம் முழுவதும் அந்தக் கிண்ணத்தின் மீதே இருக்கப் பயணம் தொடங்கினார். வழியில் சந்தித்த பிரம்மன், சிவன் எவரையும் அவர் சட்டை செய்யாமல் கிண்ணத்தையே பார்த்த வண்ணம் நடந்தார். தன்னை கூப்பிட்ட நாராயணன் குரலைக் கூட அவர் செவிமடுக்கவில்லை. ஒருவழியாக உலகை வலம் வந்தபின் எண்ணெய் சிந்தாமல் நாராயணனிடம் ஒப்படைத்தார். அப்போது நாராயணன் அவரைப் பார்த்து “உனக்கு கொடுக்கப்பட்ட ஒரே ஒரு வேலையை நீ நாள் முழுதும் செய்தபோது, எதிரில் வந்த கடவுளரைக் கவனிக்கவில்லை; என் குரலைக்கூட கேட்கவில்லை; ஒருமுறை கூட என்னை நினைக்கவில்லை. ஆனால் அந்த மானிடன் அத்துணை வேலைகள் மற்றும் துயரங்கள் இருப்பினும் ஒரு நாளைக்கு இருமுறை என்னை வணங்கினான். அவன் உண்மையான பக்தனா அல்லது நீயா” என்று கேட்டார் நாரதருக்கு கர்வம் அழிந்தது. சாதாரண மனிதர்களும் பெருமைக்குரியவர்கள் என்பதை உணர்த்துவது இக்கதை.
யோசித்துப்பாருங்கள்! கலாம் போல சாதித்தவர்கள் உலகில் ஒரு ஆயிரம் பேர் இருக்கலாம் ஆனால் இவர்களது வாழ்நாள் உழைப்பு யாருக்காக? கோடானு கோடி சாமான்ய மனிதர்களும் வாழத்தானே? இந்த கோடிக்கணக்கான வேடிக்கை மனிதர்கள்தான் நாம் உயிர் வாழ விளைவிக்கிறார்கள், தொழிற்சாலைகளில் வேலை செய்கிறார்கள், வண்டிகள் ஓட்டுகிறார்கள், வியாபாரம் செய்கிறார்கள், கட்டடங்கள் காட்டுகிறார்கள், நம்மை ஆள்வதற்கு அரசையே தேர்ந்தெடுக்கிறார்கள். பலதரப்பட்ட மக்கள் இணைந்ததுதான் ஒரு சமுதாயம். அதில் சாதித்தவர், சாதிக்காதவர் ஒவ்வொருவரின் பங்கும் தேவை. சாலைகள் இல்லாத கிராமங்களில், மலைப் பிரதேசங்களில் வாழ்பவர்களும் மானிடர்களே!
பல நேரங்களில் சாமானியர்களுக்கு இருக்கும் பொது அறிவு, படித்த பல அறிஞர்களிடம் இல்லாததைக் கண்டு வியந்திருக்கிறேன். அதே வேளை தானும் சாதனையாளன் ஆக வேண்டும் என்று முயற்சி செய்து பார்த்து, அலுத்துப்போய் வாழ்விழந்த மானிடர்கள் ஆயிரக்கணக்கில் திரிவதையும் பார்த்திருக்கிறேன். ஒரு பேருந்து நடத்துனர் ‘சூப்பர் ஸ்டார்’ ஆகி விட்டதால் தானும் அதுபோல் கனவுகண்டு, வாய்ப்பின்றி சென்னையில் வறுமையுடன் திரியும் நபர்களைச் சந்தித்திருக்கிறேன். எனவே அற்ப வேலை என்பது எதுவுமில்லை. கிடைத்த வேலையை நல்லபடி செய்யும் எல்லோரும் சாதனையாளர்களே. நினைவில் கொள்ளுங்கள்! ஆயிரத்தில் ஒருவன் சாதனையாளன் ஆகவேண்டுமானால் மீதம் தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது சாதாரண மானிடர்கள் தேவை!
இங்கு பிறந்த ஒவ்வொருவரும் தான் எப்பேர்ப்பட்டவன் என்பதை அவரது குடும்பத்துக்கும், உலகுக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எழுதாத சட்டமாக வரையறுக்கப்பட்டுள்ளது. அது மூடத்தனம். நமது நல்லெண்ணத்தையும் திறமையும் நாம் நமக்கு நிரூபித்தால் அதுவே போதும். நமது மனசாட்சியின் நிம்மதிக்கும் நிறைவுக்கும் வாழ்ந்தாலே போதும். அதற்கு நமது கடமைகளை ஒரு தவம் போலச் செய்தாலே போதும்.